படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் யார் மின்விளக்கை அணைப்பது என்பது தொடர்பான சர்ச்சையால் எகிப்திய பெண்ணொருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். திருமணமாகி ஒரு வருடமே கடந்த நிலையில், இப்பெண் விவாகரத்து கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது கணவருடனான வாழ்க்கையில் அற்பமான விடயங்களுக்குகூட வாக்குவாதம் ஏற்படுவதாக எகிப்திய தலைநகர் கெய்ரோவிலுள்ள நீதிமன்றமொன்றில் மேற்படி பெண் தெரிவித்துள்ளார். “படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் யார் விளக்கை அணைப்பது என்பது போன்ற மிக அற்பமான விடயங்களுக்கு கூட எமக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
காலையில் எத்தனை மணிக்கு விழித்தெழுவது, உணவு தொடர்பான விடயங்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் எனது கணவருடன் தொடர்ந்தும் இணைந்து வாழ நான் விரும்பவில்லை” என அப்பெண் தெரிவித்துள்ளார். இப்பெண்ணின் கணவர் விவாகரத்து செய்வதற்கு விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
ஆனால், திருமணத்தின் பின்னர் தனது மனைவி மிக மாற்றமடைந்துவிட்டதாக அவர் கூறுகிறார். “அவள் எவ்வித காரணமுமின்றி, 24 மணித்தியாலங்களும் அழுது கொண்டிருக்கிறாள். அவள் தொடர்பில் நான் பொறுமையுடன் இருக்கிறேன். விவாகரத்து செய்ய விரும்பவில்லை” என நான் தெளிவுபடுத்தியுள்ளேன்” என மேற்படி நபர் தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.