அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், தான் வளர்க்கும் கோழிக்கு செயற்கை கால் பொருத்துவதற்காக 2500 அமெரிக்க டொலர்களை (சுமார் 325,000 இலட்சம் ரூபா) செலவிட்டுள்ளார். மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த அன்ட்ரியா மார்ட்டின் எனும் பெண், கோழிப் பண்ணையொன்றை நடத்தி வருகிறார்.
கோழிகளுக்கு புனர்வாழ்வளிப்பதில் தேர்ச்சி பெற்ற பண்ணை இது. அங்குள்ள 3 மாத வயதான கோழியொன்றின் கால் அசாதாரணமான வகையில் வளைந்து காணப்பட்டது. “அது ஒரு கோழிதானே என எண்ணாமல் அக்கோழியை டவ்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் கம்மிங்ஸ் மிருக வைத்தியத்துறைக்கு கொண்டு சென்றார் அன்ட்ரியா.
அக்கோழிக்கு செயற்கை கால் பொருத்தலாம். அதற்கு 2,500 டொலர்கள் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அக்கோழி சாதாரணமான முறையில் வாழ வேண்டும் என தான் விரும்புவதாக கூறிய அன்ட்ரியா மார்ட்டின், செயற்கை கால் பொருத்துவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
“பறவைகளுக்கு சத்திரசிகிச்சை செய்வது மிக சிக்கலானது. ஆனால், இச்சத்திரசிகிசையால் அக்கோழி மிக மகிழ்ச்சியடையும். எனவே அச்சிகிச்சை பெறுமதியானது” என அன்ட்ரியா மார்ட்டின் கூறியுள்ளார்.