வவுனியாவில் நடைபெறவுள்ள வடக்கு பிரதேச செயலக கலாச்சார விழா!!

387

pirathesa

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

“இயல் இசை நாடகத்தால் இன்பத் தமிழ் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடத்தப்படவுள்ள இக் கலாசார விழா காலை 9 மணிக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனால் மங்கலவிளக்கேற்றப்பட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்காலைக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே.ஆயகுலனின் வரவேற்புரையும் இடம்பெறவுள்ளது.

தலைமையுரையினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆற்ற “காலம் தோறும் தமிழ்” எனும் இலக்கிய சொற்பொழிவினை இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரமும் நெடுங்கெணி நாவலர் முன்பள்ளி மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்வும் கவிக்கதிர் தம்பித்துரை ஐங்கரனின் தலைமையில் கவிஞர் மாணிக்கம் ஜெகன், வன்னியூர் நிசான், நந்தா, மருதோடை நிலா ஆகியோரின் பங்கேற்புடன் “நல்லதோர் வீணை செய்வோம்” எனும் தலைப்பில் கவியரங்கமும் கண்ணீந்த கண்ணப்பன் எனும் தலைப்பில் திருக்காலத்தி வில்லிசைக்குழுவினரின் வில்லிசையும் “மருதமுகில்” நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.

நூலின் வெளியீட்டுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மி.சூசைதாசனும் ஏற்புரையினை மலராசிரியர் ஜெ.கோபிநாத்தும் ஆற்றவுள்ளதுடன் நெடுங்கேணி செம்மொழிக்கலாமன்றத்தை சேர்ந்த இராஜேந்திரம், தவபாலன் ஆகியோரின் மதுரக்குரலிசையும் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரம் தலைமையில் இன்றைய உலகில் தமிழர் பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்படுகின்றதா? பின்தள்ளப்படுகின்றதா? எனும் தலைப்பில் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், இளங்கலைச்சுடர் ஜெ.கோபிநாத், க.தவபாலசிங்கம், ஜெ.திருவரங்கன், பா.ரஜீவன், த.தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது

மேலும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் செம்பு நடனமும், புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்கலைக் கல்லூரி மாணவிகளின் கீதாஞ்சலியும், வவுனியா வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் “இனியாகினும் திருந்துவோம்” எனும் தலைப்பில் தாளலயமும், நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சுளகு நடனமும், கனகராஜன்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் அரிச்சந்திர மயான காண்டம் இசை நாடகமும், மதியாமடு விவேகாநந்தா வித்தியாலய மாணவா்களின் சுமைதாங்கி எனும் சமூக நாடகமும் நடைபெறவுள்ளது.

மேலும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சத்தியவான் சாவித்திரி இசை நாடகமும், சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவா்களின் காணல் நீர் சமூக நாடகமும், நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து வழங்கும் ஸ்ரீவள்ளி எனும் இசை நாடகமும், சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் காலங்கள் மாறினாலும் எனும் தலைப்பில் சமூக நாடகமும், மாறாவிலுப்பை அ.த.க. பாடசாலையின் ஏழு பிள்ளை நல்ல தங்காள் எனும் இசை நாடகமும், கலைவேந்தன் இசை நாடக வள்ளல் ம.தைரியநாதன் குழுவினரின் பூதத்தம்பி இசை நாடகமும், கற்சிலை மடு பரந்தாமன் நாடக கலாமன்றத்தினரின் பண்டார வன்னியனார் எனும் வரலாற்று நாடகமும் இடம்பெறவுள்ளன.

இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச. மோகநாதன், வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ப.கணேசலிங்கம், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளருமான அருணா செல்லத்துரை ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மு. பாலசுப்பிரமணியமும் முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி. லிங்கநாதனும் சேவா லங்காவின் நிகழ்சி திட்ட பிரதி பணிப்பாளர் திருமதி அனட்ரோய் பிரேமலதாவும் பொஸ்டோ நிறுவன நிகழ்சி திட்ட முகாமையாளர் பி. செந்தில் குமரனும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சி திட்ட அலுவலர் சா. சயந்தனும் கலந்து கொள்ளவுள்ளனர்.