வவுனியாவில் அனுமதி பெறாது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்கள் மூடப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (13.08.2015) நடைபெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார பணிமனைக்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிராந்திய சுகாதார பரிசோதகர்களால் குடிநீரை சுத்திகரித்து குறைந்த விலையில் விற்பனை செய்த நிலையங்கள் சோதனை செய்யப்பட்டு நான்கு நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சுகாதார பரிசோதகர்களின் திடீர் சோதனை நடவடிக்கையால் வவுனியாவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பூட்டிய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் இணைந்து அவற்றை மீளத் திறக்க அனுமதிக்குமாறு கோரி பிராந்திய சுகாதார பணிமனை முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது பிராந்திய சுகாதார பரிசோதகர்களை இது தொடர்பில் கேட்ட போது, முறைப்படி அனுமதி பெற்றால் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். உரிய வசதிகள் செய்யப்பட்டு, குடிநீர் பாதிப்பு இல்லாத வகையில் வழங்க வேண்டும். எமது பணிமனையயால் கடந்த காலத்தில் கூறப்பட்ட அறிவுறுத்தல்களை இவர்கள் பின்பற்றாமை காரணமாகவே நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபேயவர்த்தன, சுகாதார பரிசோதகர்களுடனும் ஆர்ப்பாட்டக்காரருடனும் கலந்துரையாடி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்களை விற்பனை செய்யும் நிலையங்களை மீள திறக்க அனுமதி வழங்கியதுடன் உடனடியாக சுகாதார பரிசோதகர்களால் கூறப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துமாறும் தெரிவித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-






