தனுஷ் – பார்வதி நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மரியான். பரத்பாலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஒஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.
சூடான் நாட்டில் வேலை செய்த ஒரு இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே மூச்சில் 50 அடி ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு நீச்சலும் தெரியாது, நீருக்குள் மூச்சு பிடித்து மூழ்குவதும் முடியாது.
எனவே, வெளிநாட்டில் இருந்து இதற்காக சிறப்பு பயிற்சி கொடுப்பவர்களை வரவழைத்து, அவர்களிடம் கற்றுக் கொண்டு தனுஷ் இப்படத்தில் நடித்தார். 50 அடி ஆழ்கடலில் ஒட்சிசன் இல்லாமல் உப்புத் தண்ணீரில் கண்ணாடிகூட போடாமல் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் தனுஷ்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மாக் கோனிக்ஸ் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ்பெற்றவர். எனவே மரியான் படத்தின் இந்தி உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று 5 கோடி ரூபாய்க்கு விலைபேசி உள்ளது. ஒஸ்கர் ரவிச்சந்திரனும் இதற்கு ஒப்புக் கொண்டார்.
இதை அறிந்த தனுஷ் தனக்கு அதில் இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்றாராம். ஏ.ஆர்.ரஹ்மானும் தனக்கு இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
தனக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே வரும் என்று தெரிந்ததும், “ஆணியே புடுங்க வேணாம்” என ரீமேக் உரிமையை விற்க மறுத்துவிட்டாராம் ஒஸ்கர் ரவிச்சந்திரன்.