வவுனியா மாவட்டத்தில் கற்பிணித் தாய்மாருக்கு வழங்கப்பட்டுவரும் உலர் உணவு விநியோகத்தில் சீர்கேடு இடம்பெற்று வருவதுடன் கர்ப்பிணித் தாய்மார்களை அங்கும் இங்குமாக இழுத்தடிப்பும் இடம்பெற்று வருவதாக முறையிட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்விடயம் தொடர்பாக தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை (15.08.2015) காலை வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்திற்கு கற்பிணித் தாய்மாருக்கான உலர் உணவுப்பொருட்கள் பெறுவதற்காக பெருமளவான தாய்மார்கள் காலை 6 மணியிலிருந்து காத்திருந்தனர்.
எனினும் உலர் உணவினை விநியோகம் செய்யும் அதிகாரிகள் 10 மணிக்குப் பின்பே தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் பதிவினை மேற்கொண்டதுடன் பொருட்களை ஏற்றிவரும் வாகனம் வந்ததும் பொருட்கள் பின்னர் விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
3 மற்றும் 6 மாதங்களான கற்பிணித் தாய்மார்கள் காலையிலிருந்து மதியம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதையும் கடந்த வாரமும் பதிவினை மேற்கொண்டதுடன் தனியார் விற்பனை நிலையத்தில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பணித்துள்ளனர்.
பதிவினை மேற்கொள்வது ஓரிடம். பொருட்களை பெற்றுக் கொள்வது வேறு ஓரிடம், அத்துடன் மாதாந்தம் வழங்கப்பட வேண்டிய உலர் உணவுப்பொருட்களை 2, 3 மாதங்கள் சேர்த்தும் வழங்கப்படுவதாக கற்பிணித் தாய்மார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஓரிடத்தில் பதிவினை மேற்கொண்டு பொருட்களை விநியோகம் செய்தால் சீர்கேடுகள் இன்றி தடையின்றி பெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-பிராந்திய செய்தியாளர்-






