ஆண்களே இல்லாத கிராமம்!!

429

881371088Untitled-1வட கென்யாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம் தனது தனித்தன்மையால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் இந்த உமோஜா கிராமம் அமைந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 பெண்கள் கூட்டாக இணைந்து 1990-ல் வாழத் தொடங்கிய இந்த கிராமம், தற்போது 47 பெண்கள் மற்றும் 200 குழந்தைகளுடன் ஆண்வாடையே இல்லாத அபூர்வ கிராமமாக மாறியுள்ளது.

பிரிட்டன் இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்றப் பெண் இந்த கிராமத்தின் தலைவியாக செயல்பட்டு வருகிறார். இந்த கிராமப் பெண்கள் நகை செய்து விற்பதின் மூலமாகவும், இந்தப் பகுதியிலேயே கூடாரங்களால் ஆன ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலமாகவும் இவர்கள் தங்களின் வாழ்க்கை செலவினங்களை எதிர்கொள்கின்றனர்.

தற்போதும், அடிமைப் போல நடத்தும் ஆண்களுக்கிடையே வாழும் பெண்கள் தமது வாழ்வில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர்களைப் போலன்றி தமது வாழ்க்கை சுதந்திரமானதாக அமைந்திருப்பதாக இந்தப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கிராமத்துக்குள் செல்ல ஆண்களுக்கு தடையேதும் இல்லை. எனினும், அவர்கள் இந்தப் பெண்களின் அனுமதியின்றி வெகுநாட்கள் இங்கே தங்கியிருக்க முடியாது.

பெண்கள் மட்டுமே இருக்கும் கிராமம் என்பதால் அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள ஆண்கள் அவ்வப்போது அத்துமீறி செயல்படுவதுண்டு. எனினும், அனைத்து தடைகளையும் தைரியமாக எதிர்கொண்டு, இந்த 247 பேரும் பத்து குடும்பங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது