
யாழ். தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும்போது கால தாமதம் ஏற்படவில்லை. விருப்பு வாக்கு கணக்கெடுப்பு உரிய முறையில் உரிய நேரத்திலேயே நடைபெற்றதாக யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் கட்சிகளின் வாக்கு எண்ணும் நடவடிக்கையின் போதே காலதாமதம் ஏற்பட்டது. கட்சிகளின் வாக்கெண்ணும் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதமே விருப்பு வாக்கு முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதத்தை எற்படுத்தியது. எனவே விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையின்போது கால தாமதம் ஏற்பட்டதாக சிலர் குறிப்பிடுவதில் எவ்வித உண்மையும் இல்லை.
விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கை ஒருமுறை மாத்திரமே நடைபெற்றது. மீள்கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் விருப்பு வாக்கு முடிவுகளில் எந்த ஒரு அபேட்சகரும் அதிருப்தி தெரிவிக்கவுமில்லை.
எனவே விருப்பு வாக்குகளின் கணக்கெடுப்பு சகல தொகுதிகளிலும் நிறைவுற்ற பின்னர் தேர்தல் திணைக்களம் வெற்றிபெற்றவர்களின் விபரத்தை வெளியிட்டது. அதன் பிரகாரமே தான் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.





