வவுனியா இ.போ.ச. சாரதி கடந்த 24.08.2015 அன்று தனியார் போக்குவரத்துச் சங்க பேரூந்து சாரதியால் தாக்குதலுக்கு இலக்காகி வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்குள்ளான சாரதிக்கு பொலிசார் கைவிலங்கிடப்பட்டதைக் கண்டித்து இன்று(27.08) காலை 7 மணிமுதல் வவுனியா இ.போ.ச சாலை சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
கடந்த 24.08.2015 அன்று இ.போ.ச. பேரூந்து சாரதி தனது பேரூந்தினை ஹெறவப்பொத்தான பேரூந்த தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றியுள்ளார். அதே இடத்தில் தனியார் பேரூந்து சாரதியும் தனது பேரூந்தினை நிறுத்தி பயணிகளை ஏற்ற முற்றபட்டபோது இரு சாரதிகளும் கைகலப்பில் ஈடுபட்டு இ.போ.ச சாரதி பலமாக தாக்கப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் பொலிசார் தமது விசாரணையினை மேற்கொள்வதற்காக இ.போ.ச. சாரதிக்கு கைவிலங்கிட்டுள்ளனர்.
இதனைக் கண்டித்தே வவுனியா இ.போ.ச. ஊழியர்கள் இன்று 27.08.2015 காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிசாரின் இந்நடவடிக்கையினைக் கண்டித்து தாக்குதலுக்குள்ளான சாரதிக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக் கோரியும், இச் சம்பவம் போன்று இனிமேல் நடைபெறாவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர்.
இப் பணிப்பறக்கணிப்பினை வவுனியா சாலை தேசிய ஊழியர் சபையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
வவுனியாவிற்கான இ.போ.ச. சேவை இன்று முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. சகல பேரூந்துகளும் வவுனியா இ.போ.ச. சாலையில் தரித்து நிற்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
-பிராந்திய செய்தியாளர்-







