கடந்த 25 வருடங்களாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து தற்காலிக வீடுகளில் அன்றாடம் அல்லல்ப்பட்டு வாழ்ந்துவந்த பூந்தோட்ட அகதி முகாமில் வசித்துவரும் 150 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத்தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட காணியில் வீடுகள் அமைக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 80 பேர்ச் காணி என்று வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் குறித்த 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
குறித்த வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டு வீடுகளுக்கான அடிக்கல்லினை உத்தியோகபூர்வமாக நாட்டினார்.
மேலும் இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், மற்றும் ஞானம் அறக்கட்டளையின் இணை ஸ்தாபகர், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துமிந்த திஸநாயக்க, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-






