யாழ்ப்பாண அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் உலகமெங்கும் வசிக்கும் சைவப் பெருமக்கள் வரம் வேண்டி நிற்கும் புனித தலமாகும்.
தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவழா இலட்சக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று (11) வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஈழத் திரு நாட்டின் வட புலத்தில் யாழ். மண்ணில் நல்லை நகரில் கோயில் கொண்டு எழுந்தருளிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.
நாளொரு அழகு பெற்ற நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காலை 7 மணியளவில் வள்ளி தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணிக்கப்பட்ட நல்லைக் கந்தன் வீதி வலம் வந்தான்.
மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவார பாரயணங்கள் ஒலிக்க, பஜனைகள் இசைக்க கந்தப்பெருமான் தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றைய தேர்த்திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ்ந்து வடம் பிடிக்க அழகு மிகு நல்லைக் கந்தன் தேர் ஏறி வந்த காட்சி பக்தர்களின் உள்ளத்தை உருக்கியது.
வவுனியா நெற் நிகழ்வுகளுடன்
நல்லையம்பதியிலிருந்து
படங்கள் :நிருஜன்
வீடியோ : நயினை .குமரன்