வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈபிடிபி கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் பொது நூலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களில் தமது கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில் அதன் முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் சத்தியாக எமது கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் ஈபிடிபி கட்சி அரசாங்கத்துடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடும் என்று இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் அரசாங்கத்துடன் இணைந்தே தமது கட்சி போட்டியிடவுள்ளது என்ற கருத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.