கால்வாயொன்றிலான படகுப் பயணத்தின் போது சக்தி வாய்ந்த காந்தம் பொருத்தப்பட்ட கருவியொன்றைப் பயன்படுத்தி கால்வாய் நீரில் மூழ்கியுள்ள உலோகப் பொருட்களை எடுக்கும் நடவடிக்கையில் பொழுதுபோக்காக ஈடுபட்ட 8 வயது சிறுவன் ஒருவனால் வெடிக்காத நிலையிலிருந்த இரண்டாம் உலகப் போர் காலக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
நொட்டிங்ஹில் பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்டோ சுமித் என்ற மேற்படி சிறுவன், தனது இரட்டைச் சகோதரனான ஜாகொப்புடனும் நண்பனான நூருடனும் தமது பராமரிப்பாளரான ஜேம்ஸ் போல்டனின் படகில் லண்டன் கிரான்ட் யூனியன் கால்வாயில் பயணித்த வேளையிலேயே இந்தக் குண்டைக் கண்டுபிடித்துள்ளான்.
சிறுவனால் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட அந்தப் பொருள் ஒரு குண்டு என்பதை அறிந்த ஜேம்ஸ் போல்டன், உடனடியாக படகை கரைக்குச் செலுத்தி வந்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் வந்து அந்தக் குண்டைப் பரிசோதித்த போதே அது இரண்டாம் உலகப் போர் காலக் குண்டு என்பது கண்டறியப்பட்டது.தொடர்ந்து அந்தக் குண்டு செயலிழக்க வைப்பதற்காக குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரால் கொண்டு செல்லப்பட்டது.