அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.
இந்த மாளிகையில் அமெரிக்காவுக்கு வரும் வேளைகளில் சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தங்குவதுண்டு. சுமார் 22 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில் பலத்த பாதுகாப்புடன் பிரமாண்டமான மதில் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று பகல் இந்த மாளிகையின் சுமார் 8 அடி உயர மதில் சுவரை தாண்டி, இரத்த காயங்களுடன் குதித்து தப்பிவந்த ஒரு இளம்பெண், தன்னுடன் உடலுறவு வைத்துகொள்ளுமாறு இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தன்னை வற்புறுத்தியதாக பெவர்லி ஹில்ஸ் பொலிசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, இளவரசரின் மாளிகைக்கு விரைந்துசென்ற பொலிசார், அவரை கைது செய்தனர். அந்த மாளிகையில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.
கைது செய்யப்பட்ட இளவரசர் மீது மேலும் நான்கு பெண்கள் இதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தெரிவித்த பொலிசார், இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் மீது இயற்கை நியதிக்கு மாறான வகையில் பெண்ணை உடலுறவுக்கு வற்புறுத்திய குற்றப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 இலட்சம் பவுண்டுகள் சொந்த பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரை அளித்த பெண் இளவரசர் வீட்டில் வேலை செய்துவந்ததாக தெரிகிறது. இவ்வழக்கில் அக்டோபர் மாதம் 19-ம் திகதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது.





