அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நகரிலுள்ள வீதியொன்றினுடாக தனது விசேட வாகனத்தில் புதன்கிழமை பயணித்த போது, 5 வயது சிறுமியொருவர் ஒருவாறு பாதுகாப்பு தடையைத் தாண்டி வந்து பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதமொன்றை கையளித்து பாப்பரசரது மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கொன்ஸ்ரிரியூஷன் வீதியின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைகளுக்கு அப்பால் பாப்பரசரை காணும் முகமாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் சோபி குரூஸ் என்ற மேற்படி சிறுமியும் ஒருவராவார்.
சோபி தனது குடும்பத்தினர் சகிதம் அங்கு வந்திருந்தார்.
பாப்பரசரின் வாகனம் சோபியும் அவரது குடும்பத்தினரும் நின்ற இடத்தை நெருங்கி வரவும் அவரது தந்தையான ராவுல் குரூஸ் சட்டென சோபியை தூக்கி பாதுகாப்பு தடைக்கு அப்பால் இறக்கி விட்டார்.
இந்நிலையில் சோபி தனது கையில் கடிதத்துடன் பாப்பரசரின் வாகனத்தை நோக்கிச் செல்லவும் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரைத் தடுக்க முயற்சித்தனர்.
எனினும் வாகனத்திலிருந்த பாப்பரசர் சோபியை அவதானித்து அவரை தன்னிடம் வருவதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சமிக்ஞை செய்துள்ளார்.
மெக்ஸிக்கோவின் ஒஸாகா மாநிலத்திலிருந்து அமெரிக்காவுக்கு வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளான பெற்றோருக்கு பிறந்த சோபி, சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்ற வகையில் தனது பெற்றோர் நாடு கடத்தப்பட்டு தமது குடும்பம் பிரிய நேரிடும் என அஞ்சுவதாகவும் அதனால் பாப்பரசர் தனது தாய் மற்றும் தந்தைக்கும் அமெரிக்காவிலுள்ள ஏனைய மில்லியன்கணக்கான குடியேற்றவாசிகளுக்கும் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருக்க உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தும் கடிதத்துடன் பாப்பரசர் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த சிறுவர்களின் கரங்களைப் பிடித்திருப்பதாக காண்பிக்கும் ஓவியமொன்றையும் பாப்பரசரிடம் கையளித்தார்.
அந்த ஓவியத்தில் ‘நானும் எனது நண்பர்களும் எமது தோலின் நிறத்தைப் பற்றிய கவலையின்றி ஒருவரையொருவர் நேசிக்கிறோம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
“எனக்கு எனது பெற்றோருடன் இருப்பதற்கான உரிமை உள்ளதாக நம்புகிறேன். எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கான உரிமை உள்ளது. எனது தந்தையைப் போல இந்நாட்டிலுள்ள அனைத்துக் குடியேற்றவாசிகளும் இந்த நாட்டிற்கு உணவளிக்க உதவி வருகின்றனர். அவர்களுக்கு கௌரவத்துடன் வாழ தகுதி உள்ளது. அத்துடன் குடியேற்ற சீர்திருத்தமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியும் உள்ளது” என சோபியால் பாப்பரசரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறுமியின் துணிச்சலான செயற்பாட்டாலும் அவரது ஓவியத்தாலும் மனம் நெகிழ்ந்த பாப்பரசர், சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டு அவரை ஆசிர்வதித்தார்.
சோபியின் பெற்றோர் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்ற போதும் சோபியும் அவரது சகோதரியும் அமெரிக்காவில் பிறந்தவர்கள் என்ற வகையில் அமெரிக்கப் பிரஜைகளாவர். இந்நிலையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்ற வகையில் பெற்றோர் நாடு கடத்தப்பட்டால் சோபி யும் அவரது சகோதரியும் அமெரிக்காவில் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழ நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சோபி கூறுகையில், அமெ ரிக்காவில் வாழும் சட்டவிரோத குடி யேற்றவாசிகளுக்கு சட்டபூர்வ அந் தஸ்தை வழங்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோர வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியிடம் என்றாவது கையளிக்க வேண்டும் என்ப தற்காக இதையொத்த கடிதத்தை ஏற்கனவே எழுதி வைத்திருப்பதாக அவர் கூறினார்.