செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் நாஸா விண்வெளி அமைப்பு அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை பற்றி அமெரிக்கா தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. முன்பு எப்படி அபரிமிதமாக அங்கு தண்ணீர் இருந்ததோ அதேபோல இப்போதும் அங்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறது நாசா.
செவ்வாயில் உள்ள மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தரைப்பரப்பிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஏற்கனவே ரெகன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்து உள்ளது.
அந்த விண்கலம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்து உள்ளது.அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் வெப்பம் நிலவும் காலத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக நேற்று தெரிவித்தனர்.