
சென்னை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கொலைமிரட்டல் விடுவதாகக் கூறி, அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தன் மனைவியுடன் முதல்வரின் கார் நிறுத்துமிடம் அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவம் இன்று கோட்டை தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று சட்டமன்ற நடவடிக்கைகளை காண மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
சட்டமன்றத்தில் கலந்துகொள்ள முதல்வர் ஜெயலலிதா வந்தபின், பகல் 12 மணியளவில் முதல்வரின் கார் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகே வந்த தம்பதி, திடீரென மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதனை அவதானித்த பொலிஸார் உடனடியாக அவர்களை முதலுதவிக்கு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.விசாரணையில் அவர்கள் தருமபுரி மாவட்டம் மோளையாணுரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கவிதா தம்பதியர் எனத் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரான அவரை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான பழனியப்பன், தனிப்பட்ட பகையின் காரணமாக கட்சிப்பதவியை பிடுங்கிவிட்டதோடு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் மூலம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து தம்பதினர் தெரிவிக்கையில், முதல்வருக்கு புகார் மனு அளித்ததற்காக அமைச்சரும், அவரது உறவினர்களும் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்ததாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாலேயே தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





