இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 20 பேர் புனர்வாழ்வின் பின் இன்று புதன்கிழமை சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இவ்வாறு இணைக்கப்பட்டவர்களில் 11 பேர் புனர்வாழ்வு காலத்தில் கிராம சேவகர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளதுடன் ஏனையவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை முன்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டவர்களின் வாழ்வதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்களில் 30 பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் புனர்வாழ்வு காலத்தில் கணினி பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலளார் வி.சிவஞானசோதி மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர், புனர்வாழ்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆனந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






