
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு – 20 போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நேற்று நடைபெற்றது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்றிபெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் டு பிளெசிஸ் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தார்.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தவானும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினா்.
தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் துடுப்பாட்டவரிசை தடுமாறியது.
இந்நிலையில், 4 ஆவது ஓவரின் இறுதிப்பந்தில் தவான் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விராட் கோலி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதே போல் அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களு்டன் ஆட்டமிழந்தனர்.
அதிகப்பட்சமாக ரோகித் சர்மா மற்றும் ரெய்னா ஆகியோர் தலா 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இறுதியில் இந்திய அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களில் சுருண்டது.
தென்னாபிரக்க அணி சார்பில் அல்பி மோர்கல் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹிர் மற்றும் மோரிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 93 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஏ.பி. டிவில்லியர்ஸ் மற்றும் அம்லா ஆகியோர் களமிறங்கினர்.
அம்லா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டூ பிளாசிஸ் 16 ஓட்டங்களுடனும் டிவில்லியர்ஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுமினி இந்த ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார்.
அவருடன் இணைந்த பிஹார்டின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிஹார்டின் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததையடுத்து மில்லர் களம் புகுந்தார்.
இறுதியில் ரெய்னாவின் பந்தில் பவுண்டரி அடித்த டுமினி தென்னாபிரிக்க அணியை வெற்றி பெற செய்தார். அப்போது டுமினி 30 ஓட்டங்களுடனும் மில்லர் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு-20 போட்டி எதிர்வரும் 8 ஆம் திகதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.





