எதிர்வரும் அக்டோபர் மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலிலே திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடுவதை அறிகின்றோம்.
தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றார்.
இவர் ஜெர்மன் மொழியிலே (DEUTCH) ஆற்றல் மிக்கவர். இவர் போன்று மொழிப் புலமையுள்ளவர்கள் எங்கள் மத்தியிலே குறைவாகவே காணப்படுகின்றனர். இவரது மொழியாற்றல் காரணமாக ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் எங்களுடைய மக்களுக்குத் தேவையான உதவிகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றார்.
இலங்கையிலே வாழுகின்ற எங்களுடைய மக்களுக்காக இவர் மிகவும் கரிசனையுடன் சேவைசெய்து வருபவர். தேர்தலிலே இவருடைய வெற்றி இங்கு வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தமட்டிலே ஒரு மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.
எனவே, அங்கு வாக்குரிமை உள்ள அனைத்து மக்களும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களுக்கு ஆதரவளித்து இவரைத் தெரிவு செய்வதன் மூலம் அங்கு வாழுகின்ற மக்களுக்கு மாத்திரமல்ல இங்கே வாழக்கூடிய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தேவையானபோது சுவிஸ் நாட்டு அரசை எங்களுடைய பிரச்சினைகளில் அக்கறை கொள்ள வைக்கவும் அது உதவியாக இருக்கும்.
த.சித்தார்த்தன், பா.உ.,
(யாழ். மாவட்டம்)
13.10.2015.