298 பயணிகளுடன் காணாமல் போனதாக கருதப்பட்ட எம்.எச்.17 மலேசிய விமானத்தை, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணைதான் தாக்கியுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் எம்.எச்.17 எவ்வாறு வெடித்துச் சிதறியது என்பது குறித்த நெதர்லாந்து நாட்டு நிபுணர்களின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் எம்.எச்.17 பயணமானது.
உக்ரைன் நாட்டுக்குட்பட்ட வான்வெளியில் சென்றபோது ’பக்’ ரக ஏவுகணை தாக்குதலில் அந்த விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதறி பலியாகினர். அந்த விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படை தாக்கியதாக உக்ரைன் அரசு தெரிவித்தது.
ஆனால், உக்ரைன் இராணுவம் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையில் நெதர்லாந்து விமானப் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தெற்கு நெதர்லாந்தில் உள்ள ஜில்சே-ரிஜன் விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், மலேசிய விமானத்தை தாக்கியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான் என்று உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பக் ஏவுகணையானது விமானத்தின் இடது பக்கம் தாக்கியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஏவுகணையை இயக்கியது உக்ரைன் கிளர்ச்சியாளர்களா அல்லது ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களா? என்பது பற்றி விசாரணை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விசாரணையால் ரஷ்யாவிற்கு நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.