அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் மீது ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தொலைதூரத்திற்கு சென்று எதிரியின் இலக்கை மிகத்துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை ஒன்றை கடந்த ஒக்டோபர் 10ம் திகதி ஈரான் மேற்கொண்டிருந்தது.
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி, ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில், அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது.
இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை சோதனை மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளன.