சென்னை, தி.நகரில் கடந்த மாதம் ஓய்வுப் பெற்ற நீதிபதி கைலாசம் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உள்பட பல நீதிபதிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வுப் பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கி விடுகின்றனர்’ என்று பேசினார்.
இவரது பேச்சு நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வைரமுத்து 4 வாரத்துக்குள் நேரில்வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.