மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் உண்ணாவிரதம்!!

394

சிலாபத்தில் தனது மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் பாடசாலை நுழைவாயில் முன்பாக உண்ணாவிரதமிருந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

சிலாபத்தில் உள்ள ஆனந்தா தேசிய பாடசாலையின் நுழைவாயில் முன்பாக நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக உண்ணாவிரதமிருந்த நிர்மலி பெரேரா எனும் பெண்மணி கருத்து வெளியிடுகையில் , இந்தப் பாடசாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளேயே எங்கள் வீடு அமைந்துள்ளது. எனது மூத்த பிள்ளைகள் இரண்டு பேரும் இதே பாடசாலையில் தான் கல்வி கற்கின்றார்கள்.

இருந்தும் கடந்த பத்து மாத காலமாக எனது மகனுக்கு இந்தப் பாடசாலையில் அனுமதி கேட்டுப் போராடியும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவனது ஒரு வருடப் படிப்பு பாழாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உண்ணாவிரதமிருந்த பெண்ணை பாடசாலையின் பாதுகாவலர்கள் விரட்டியடிக்க முற்பட்ட சமயத்தில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகர அவ்விடத்துக்கு வருகை தந்துள்ளார்.

கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி இப்பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து நிர்மலி, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

1 2