யாழில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

598

Water

யாழ்.மாவட்டத்தில் நீரால் பரவும் நோய்களின் தாக்கம் அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் இந் நோய்கள் தொடர்பாக பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை செய்துள்ளார்.

குறிப்பாக இவ்வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த 24 ஆம் திகதிவரைக்கும் 512 பேர் வயிற்று உளைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரினால் பரவும் கிருமியின் தாக்கம் காரணமாக அதே காலப்பகுதிக்குள் மட்டும் 3 ஆயிரத்து 629 பேர் நோய்வாய்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

தற்போது பருவமழைக்காலம் ஆரம்பித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பது வழமையாகும். மழை வெள்ள நீர் எமது நிலத்தடி நீருடன் கலந்து கிருமி தொற்றுக்கு உள்ளாகின்றதே இதற்கு முக்கியமான காரணம்.

இவ்வாறு நீரினால் பரவும் வாந்தி போதி, வயிற்றுளைவு போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு கொதித்தாறிய நீரினை அனைவரும் பருகுவது நன்மைபகிர்க்கும்.

வயிற்று உளைவு, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதனை புள்ளிவிபரங்களின் ஊடாக அறிய முடிகின்றது.

குறிப்பாக வயிற்று உளைவு காரணமாக இவ்வருடன் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிவரை 786 பேர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் இவர்களில் 512 பேருக்கு வயிற்றுப் போக்கு நோய் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சாதாரண பாதிப்பினை ஏற்படுத்தி வந்த வயிற்றுப் போக்கு நோயானது கடந்த செம்டெம்பர் மாதத்தில் இருந்து சடுதியாக அதிகம் பரவுகின்ற நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதே காலப்பகுதியில் வயிற்றுப் போக்கு மற்றும் கிருமி தொற்று நோய்கள் காரணமாக 3 ஆயிரத்து 629 பேர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

நீரினால் பரவுகின்ற இந் நோய் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பொது மக்கள் அனைவரும் கொதித்தாறிய நீரினை பருகுமாறும் பணிப்பாளர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.