மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நேற்றைய போட்டி மழை காரணமாக சற்று பிந்தியே ஆரம்பமானது. அதன்படி மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பிளட்சர் மற்றும் சார்லஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த இருவரையும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லக்மால் வீழ்த்தினார்.
இந்த இருவரும் முறையே 3 மற்றும் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினர். அதன்பிறகு ஜோடிசேர்ந்த பிராவோ மற்றும் சாமுவெல்சையும் பிரித்தார் லக்மால். இதில் சாமுவெல்ஸ் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்க மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நீண்ட நேரத்திற்கு இடை நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி 8.30 மணிக்கு ஆரம்பமானது.
அதன் பின்னர் அதிரடியாக ஆடிய பிராவோ 38 ஓட்டங்களுடனும் ரசல் 41 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ஹோல்டர் 36 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 26 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் அசத்திய சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும் அசந்த மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இலங்கை அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 26 ஓவர்களுக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் மற்றும் குசல் ஆகியோரின் அதிரடியில் இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான ஓட்டச் சேர்க்கையைப் பெற்றுக்கொண்டது.
அதன்பிறகு குசல் பெரேரா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டில்ஷான் அதிரடியாக ஆடி 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 59 ஓட்டங்களை விளாசினார்.
அதன் பின்னர் திரிமன்ன (17), மெத்தியூஸ் (13), குணதிலக்க (12), சிறிவர்தன (7), ஜசூரிய (0) என சொற்ப ஓட்டங்களுடன் அடுத்தடுத்து இலங்கை அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இறுதியில் அஜந்த மெண்டிஸ் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் கிடைத்த ப்ரீ ஹிட்டைப் பயன்படுத்திக்கொண்ட அஜந்த மெண்டிஸ் சிக்ஸர் ஒன்றை விளாசி இலங்கைக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
அஜந்த மெண்டிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.