அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா!!

328

cinema

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாஜி ஹீரோயின் ராஜசுலோச்சனா திடீர் மரணம் அடைந்தார்.

அடுத்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சுகுமாரி மரணம் அடைந்தார். இசைத் துறையை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன், டி.கே.ராமமூர்த்தி, லால்குடி ஜெயராமன் ஆகியோர் அடுத்தடுத்து இயற்கை எய்தி இசை உலகில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றார்கள்.

50 படங்களை இயக்கிய மணிவண்ணன் மரணத்தை முத்தமிட்டார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் ராசுமதுரவன் இளம் வயதிலேயே புற்றுநோய்க்கு பலியானார். ஜெமினி லேப் ஆனந்த் சினி சர்வீஸ் நிர்வாகத்தின் தலைவரும் தயாரிப்பாளருமான ரவிசங்கர் பிரசாத் தற்கொலை செய்து கொண்டது சினிமாவில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து 50 வருடங்கள் தமிழ் சினிமாவின் ஆணிவேராக இருந்த காவியக் கவிஞர் வாலி நம்மை விட்டுச் சென்றது சினிமாவில் மட்டுமல்ல நாட்டு மக்களிடமும் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அந்த துக்கம் முடிவதற்குள்ளாகவே மஞ்சுளாவை சினிமா இழந்தது. இப்படி அடுத்தடுத்து சினிமா ஜாம்பவான்கள் மறைந்தது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மரணம் கடவுளின் கையில் என்றாலும் அடுத்தடுத்து அதை சந்திப்பதால் அது கலைஞர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.