வவுனியாவில் இன்று (02.11.2015) இடம்பெற்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மிக முக்கியமான நான்கு கோரிக்கைகள் முன்வைக்கபட்டுள்ளது. அவையாவன..
1. வவுனியா வர்த்தகசங்கத்துக்கு நீண்டகாலமாக சொந்தமாக ஒரு கட்டிடம் அமைப்பதற்குரிய காணித் துண்டொன்றை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டமையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை என்பன இணைந்து வர்த்தக சங்கத்தை அமைக்க ஏதுவாக காணியொன்றை பெற்றுத்தர ஆவண செய்யவேண்டும்.
2. வவுனியா குடியிருப்பு பகுதியில் அதிரடிப்படையின் வசமுள்ள கலாசார மண்டபத்தை பொதுமக்கள் பாவனைக்கு பெற்றுத்தர வேண்டும். அக்கட்டிடத்தை பெற்றுகொள்வதன் மூலம் ஏழை எளிய மக்களின் கலாசார நிகழ்வுகளை குறைந்த வாடகையை செலுத்தி நடாத்த கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கபட்டது.
3. வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதி தொடக்கம் வவுனியா நகரில் உள்ள பள்ளிவாசல் சந்தி வரையான கடை (பசார்) வீதி நடைபாதை மற்றும் வடிகால்கள் புணரமைக்கப்பட வேண்டும்.
4. வவுனியா வர்த்தகர்கள் காசோலை மோசடி காரணமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இக் காசோலைகள் தொடர்பிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பொலிசாரிடம் செல்லும்போது, அவர்கள் அது சீட்டுக் கொடுப்பனவுடன் சம்பந்தப்பட்டதெனக் கூறி அதில் கவனம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டி, வர்த்தகர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ள இந்த காசோலை மோசடி தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் துரித கதியில் நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மற்றும் வடமாகாண அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வவுனியாவில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வேண்டுகோள்விடுக்கபட்டது.
-பிரதேச நிருபர் –