ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் கடந்த மாதம் அப்துல்கலாம் சிலை திறக்கப்பட்டது. இதற்கு தெலுங்கானாவில் உள்ள அவாமி மஜ்லிஸ்–இ–அமல் தெலுங்கானா எனும் முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மனிதர்களுக்கு சிலை அமைப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே அப்துல்கலாம் சிலையை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.
மேலும் ஐதராபாத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களின் சிலைகளை உடனே அகற்றாவிட்டால் அவற்றை நாங்களே இடித்து தள்ளுவோம் என்றும் அவாமி மஜ்லிஸ்–இ–அமல் தெலுங்கானா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள 6 முஸ்லிம் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அவாமி மஜ்லிஸ்–இ–அமல் தெலுங்கானா அமைப்பின் கோரிக்கையை ஏற்க தெலுங்கானா அரசு மறுத்து விட்டது. இது தொடர்பாக தெலுங்கானா துணை முதலமைச்சர் முகம்மது அலி கூறியதாவது:–
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றே முஸ்லிம் தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. மாநில அரசு எந்த மத அடிப்படையிலும் செயல்படுவதில்லை. தலைவர்கள் இந்த சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளை போற்றும் வகையில்தான் அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் கூட முஸ்லிம் தலைவர்களுக்கு சிலை அமைக்கபட்டுள்ளது. எனவே ஐதராபாத்தில் இஸ்லாமிய தலைவர்களுக்கு சிலைகள் இருப்பதில் எந்த தவறும் இல்லை, என்றார்.