அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை இல்லையேல் அரசுடனான உறவு மீள்பரிசீலனை செய்யப்படுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் மையம் என்று சொல்லக் கூடிய வவுனியா மாவட்டத்திலே மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோதும், 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி என்று கேட்ட போதும், ஜனநாய ரீதியாக நடந்த தேர்தல் காலங்களிலும், உரிமைக்கான போராட்ட காலங்களிலும் வவுனியா வர்த்தக சங்கம் செய்த உதவிகளை மறந்துவிட முடியாது.
இந்த ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இந்த நாட்டில் நிரந்தரமான சாமாதானம் மற்றும் அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
இந்த ஆண்டிலே ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என இரு தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் நாட்டிலே ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ஆட்சிமாற்றம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா என்றால் இல்லை. அதற்காக நாம் இன்னும் பல மைல்கள் பயணிக்க வேண்டியுள்ளது.
அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு எமக்கு வேண்டும். நீங்கள் எமக்கு வழங்கியிருக்கும் பணி மிகவும் கடினமான பணி. எமது மக்களின் விடிவிற்காக நாம் இன்னும் பல தடைகளை தாண்டி செல்லவேண்டியுள்ளது.
குறிப்பாக எங்களுக்கு முன்னால் பல வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல் கைதிகளின் பிரச்சினை இருக்கின்றது.
இந்த நாட்டின் ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது எதிர்வரும் 7 ஆம் திகதி தான் தெரியும். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஒரு பாராதூரமான, இந்த நாட்டின் அரசியலை பாதிக்கின்ற விளைவு ஏற்படும் என நினைக்கின்றேன்.
அதுமட்டுமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் இந்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் அரசுடான பேச்சுக்கள், உறவுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏனெனில் கடந்த 10 வருடகாலமாக இந்த நாட்டிலே மாற்ற முடியாது என்று இருந்த ஒரு இருண்ட யுகத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் தான் மாற்றியமைத்தவர்கள்.
இந்த ஜனாதிபதியும், பிரதமரும் தெற்கில் இருக்கின்ற இனவாதிகளுக்கும், சலசலப்புக்களுக்கும் பயந்து அரசியல் கைதிகள் விடயத்தில் செயற்படாவிட்டால் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதே சரீதியிலும் அரசுக்கு அழுத்தங்கள் ஏற்படும். எனவே, இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இருக்கிறது. இதன் மூலமே வடக்கும், தெற்கும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.