இம்மாதம் 23ம் திகதி முதல் 29ம் திகதி வரை தேசிய சட்ட வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது. நீதி அமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன இணைந்து நாடு முழுவதும் பல்வேறு செயற்பாடுகளை இந்தவாரத்தில் முன்னெடுக்கவுள்ளது.
அதன்படி கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் சட்ட ஆலோசனை நிலையங்களை நடத்தவுள்ளது.
இந்தவாரத்தில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளூடாக மக்களுக்கு நேரடியான சட்ட ஆலோசனைகள் வழங்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நீதித்துறை விடயங்களில் பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அறியத் தருவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0113 133 864, 0113 133 862 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய சட்ட வாரத்தின் நிறைவு விழா பிரதமர் தலைமையில் வரும் 28ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.