பொகவந்தலாவை – செப்பல்ட்டன் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ.அமரசிறி தெரிவித்தார்.
குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 72 மாணிக்கக்கல் அகழ்வு குழிகளுக்குள் முழுமையாக வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நீரை இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி, குழிகளுக்குள் புகுந்துள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சீரற்ற வானிலையினால் மாணிக்கக்கல் அகழ்வு குழிகளில் பணி புரியும் சுமார் 1500ற்கும் மேற்பட்ட பணியாட்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.