முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

377

IND

மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது.

இந்தியா- தென்னாபிரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 68 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக முரளி விஜய் அரைசதம் கடந்து 75 ஓட்டங்கள் எடுத்தார். புஜாரா 31 ஓட்டங்களும், ஜடேஜா 38 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அதே 68 ஓவர்களில் 184 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 63 ஓட்டங்களும், அணித்தலைவர் அம்லா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில், அஸ்வின் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், மிஸ்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 75.3 ஓவர்களில் 200 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில், ஹார்மர், தாகிர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாய் அமைந்தது.

பிளண்டர், டுபிளசிஸ் தலா 1 ஓட்டங்களிலும், அம்லா ஓட்டங்களின்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாபிரிக்கா 10 ஓட்டங்களுக்கே 3 விக்கட்டுகளை இழந்தது.

பின்னர் சுழலிக்கு சாதகமான ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா தொடர்ந்து விக்கட்டுகளை வீழ்த்தினர். இதனால் தென்னாபிரிக்காவின் முன்கள துடுப்பாட்ட வரிசை சரிந்தது.

டிவில்லியர்ஸ், எல்கர் தலா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் காப்பாளர் விலாஸ் (7), ஹார்பர் (11)நிலைக்கவில்லை.வான் செய்ல் (36)ஓரளவு ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்க அணி.

இதனால் இந்தியா 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில், சுழலில் மிரட்டிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.