
நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப் பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் காலையில் பாடசாலைக்கு சென்ற அதிபர் பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்ட போது காவலாளியினால் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிபரினால் வலய கல்வவிப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவரால் உத்திரவிடப்பட்ட நிலையில் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில் பொலிஸாரினால் விடுதியில் தங்கியிருந்த இ.சந்திரகாசன், எஸ்.பிரதீபன், எஸ்.தசபுத்திரன், து.திருக்குமரன், எஸ்.நிசாந்தன், வினோராஜ் ஆகிய 6 ஆசிரியர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது நீதிமன்றத்தால் குறித்த ஆறு ஆசிரியர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு, எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுவதால் வட மாகாண கல்வி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஆவண செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி :தமிழ்வின்