சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்திருந்த வேண்டுகோளிற்கு இணங்க வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
வவுனியா நகரின் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் இ.போ.சபை பேருந்துக்களும் சேவையில் ஈடுபடவில்லை. இருப்பினும் தூர இடங்களுக்கான போக்குவரத்தினை இ.போ.சபை பேரூந்துக்கள் மேற்கொள்கின்றன.
அரச அலுவலகங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகள் வழமைபோன்று இயங்குகின்றன .
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் வவுனியா நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. வீதிகளில் பொலிசார் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்படுகின்றது.
-பிராந்திய நிருபர் –