அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா, சிதம்பரபுரம் பிரதேசத்தில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த கிராம மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சிதம்பரபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திற்க முன்பாக அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது சிறுவர்கள் பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி உண்ணாவிரத்தை மேற்கொண்டதுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் கொடு, நல்லாட்சி அரசே கைதிகளை விடுதலை செய், அரசியல் கைதிகளை வாழ விடு நல்லாட்சி அரசே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
இவ் அடையாள உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாவட்ட இணைப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஐயா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் நிகேதன், கேசவன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறுப்பிடத்தக்கது.