தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் விதமாக தனியறையில் வைத்து பூட்டிய ஆசிரியர், சிறுவர்களை திறந்து விடாமல் மறதியில் வீடு சென்ற சம்பவத்தால் உத்திரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கோஜ்வா பகுதியில் சரை சுர்ஜன் பிரிவில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளிய்யில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவர்களான ஆயுஷ் மற்றும் ரதி ஆகியோர் மிகுந்த பசியின் காரணமாக, மதிய உணவை வகுப்புகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது ஆசிரியருக்கு தெரியாமல் சாப்பிட்டுள்ளனர்.
அதனைக் கண்டறிந்த ஆசிரியர், மாணவர்களைத் தண்டிக்கும் விதமாக, அவர்களாஇ ஒரு தனியறையில் வைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் ஞாபக மறதியில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்று விட்டார். அடைத்து வைக்கப் பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் திறந்து விடாததால் பயத்தில் அழத் தொடங்கியுள்ளனர் அச்சிறுவர்கள்.
பூட்டிய அறைக்குள் குழந்தைகளின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆவேசமாக அப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர். பின்னர், காவல் துறையினரின் தலையீட்டால் அவர்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர்.