தேசிய அரசாங்கத்தின் கீழ் நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு தேவையான பத்து அத்தியாவசியப் பொருட்களுக்கான சலுகைகள் உள்ளடங்கலாக மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் திட்டங்கள் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டின் நீண்டக்கால பொருளாதார ஸ்திரதன்மைக்கும் அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகள் உட்பட்ட ஏனைய தேவைகளுக்கும் சதாரண மக்களை பாதிக்காதவாறு முறையான வரி அறவீடானது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பல்வேறு எதிர்பார்ப்புகளின் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில் இம்முறை தேசிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டமானது பல்வேறு பொருளியல் அறிஞர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட மக்களின் யோசனைக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுதிட்டத்தில் மக்களின் வாழ்கை சுமையை குறைக்கும் யோசனைகள் உள்ளடங்களாக மக்களுக்கு தேவையான பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதோடு தனிநபர் வருமானத்தை அதிகரிக்கும் செயற்றிட்டங்களும் உள்ளடக்கபட்டுள்ளது.
ஒரு நாட்டின் நீண்டக்கால பொருளாதார செயற்பாடுகளுக்கு உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதிகள் மிகவும் அவசியமானது அந்தவகையில் இந்த வரவு செலவு திட்டத்தில் மேற்கண்டவறான விடயங்களுக்கு அதிகளவான முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒரு அரசாங்கத்தின் நீண்டகால செயற்றிட்டங்களுக்கும் அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகளுக்கும் வரி வருமானமானது மிகவும் அவசியமானது. மறுபுறம் மக்களும் வரி வருமானத்தை உரிய முறையில் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
எனவே ஒரு அரசின் வரி அறவீடானது அந்நாட்டின் சாதாரண மக்களை பாதிக்க கூடாது. அந்தவகையிலேயே எமது புதிய வரவு செலவு திட்டத்திலும் வரி வருமானம் உள்ளிட்ட யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே ஒரு நாட்டின் நீண்டக்கால பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கல்வி, சுகாதாரம், கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தேசிய அரசாங்கத்தின் புதிய வரவு செலவு திட்டம் பெரும் அளவு பங்களிப்பு செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.





