20 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் இலங்கையை தோற்கடித்த தென்னாபிரிக்க அணி!!

457

southafrica

கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்கா சார்பில் டேவிட் மில்லர் 85 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 3, திசாரா பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 224 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறி வந்தது.

எனினும் மத்திய வரிசையில் களம் புகுந்த திசார பெரேரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இலங்கையின் பக்கம் வெற்றிவாய்ப்பு திரும்பியது. திசார பெரேரா பீட்டர்சன் வீசிய ஒரு ஒவரில் 34(5 ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டம்) ஓட்டங்களை விளாசினார். இந்த ஓவரில் பீட்டர்சன் 35 ஓட்டங்களை வழங்கினர். இதுவே ஒருநாள் போட்டி ஒன்றில் வழங்கப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும்

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திசார பெரேராவை ஆட்டமிழக்கச் செய்து தென்னாபிரிக்கா இலங்கை இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இறுதியில் இலங்கை அணி 43.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் திசார பெரேரா அதிரடியாக ஆடி 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ட்சொட்சொபே 4 விக்கெட்களையும் பெஹர்தீன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நான்காவது போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.