வவுனியா பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு வடமாகாண சுகாதார அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது
வவுனியா மாவட்டத்திலுள்ள பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டிடத் தொகுதியானது நேற்று காலை 10.00 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கத்தால் திறந்து வைக்கப்பட்டது.
சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு எய்ட்ஸ் ,சலரோகம், மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்டத்தின் படி உலக நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
கட்டிடத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்திய வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் பூவரசங்குளம் வைத்தியசாலையானது இப்பிரதேச மக்களுக்கு மாத்திரமல்லாமல் 2009 ஆம் ஆண்டளவில் மக்கள் யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து வவுனியாவுக்கு வந்தபோது தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வைத்திய தேவையை பூர்த்தி செய்யும் வைத்தியசாலையாக பூவரசங்குளம் வைத்தியசாலை இயங்கியதாக தெரிவித்தார்.
நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, தியாகராசா, எம்.பி. நடராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.