2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 1300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 1100 பேர் பலவந்தமான முறையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருதற்கான காரணிகளை கண்டறிய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் சொன்யா கோப் தெரிவித்துள்ளார். உரிய வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பபுவா நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளும் இவ்வாறு நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். எனவே சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணத்தை வழங்குவது பயனற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.