தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அதிவேக ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளமையினை தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட வடிவங்களில் ஒன்றாக கருத வேண்டும் என்று நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நிலையில் திடீரென இடம்பெற்ற குறித்த மாணவனின் தற்கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்துகல்லூரியில் பயின்று வந்த 18 வயது நிரம்பிய ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் அதிவேக ரயில் முன்பாக பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் சடலத்தின் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் அவர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறிய முடிந்தது. அதன் வாயிலாக இதன் பின்னணியில் அரசியல் காரணியே உள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடிந்தது.
இந்நிலையில் மாணவனை எவரும் ரயில் முன்பாக தள்ளியிருக்கலாம் என்ற கோணத்தில் சந்தேகங்களும் எழுந்துள்ளன.அதேபோல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற விசாரணைகளில் ஒருவர் மாணவன் தானாக வந்து ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் அதனை தான் நேரில் கண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவனின் கடிதத்தில் தமிழ் ஈழ விடுதலையை கொடு ஒளியூட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கைகளுமே வலியுறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிட்டு கூறதக்க விடயம்.
அதனால் இந்த கடிதத்தின் கோணத்தில் இந்த சம்பவத்தை நோக்கினால் இது தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று என்ற கோணத்திலேயே பார்க்கப்பட வேண்டும். அதனால் இது தமிழர் உரிமைக்கான போராட்டம் என்றே கருதப்பட வேண்டும் என்பதே நவ சமசமாஜ கட்சியின் நிலைப்பாடு என்றார்.





