கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது.
மின்சார வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். நகரமே ஸ்தம்பித்துள்ளது. சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போரூர்- வடபழநி சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், அமைந்தகரை சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கிண்டி வேளச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னை வருவதற்கு பெங்களூர் சாலை மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.







