வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில்கள் இருவரைத் தாக்கி அவர்களது உடமைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் மூவர் பிட்டுகல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடுவலை – மாலபே வீதி, அதுருகிரிய பகுதியில் வைத்து அதிக வேகத்துடன் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட முற்பட்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த மூவர் துப்பாக்கி மூலம் பொலிஸாரைத் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வசம் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் கொள்ளையிட்ட அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த இரண்டு பொலிஸாரும் அதுருகிரிய பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளதோடு, விரைந்து செயற்பட்ட அவர்கள் சந்தேகநபர்களை முச்சக்கர வண்டியுடன் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து துப்பாக்கி, ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன, மேலும் இவர்கள் தங்காலை மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





