கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் புரந்தர தாசர். கர்நாடக இசையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார். புரந்தரதாசர் அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்னுடைய நண்பர் ராவ்பகதூரை அனுப்பி வைத்தார்.
விழாக்குழுவினர் புரந்தரதாசர் உருவத்தில் ரஜினியை ஓவியமாக வரைந்து ராவ்பகதூரிடம் வழங்கினர். பெங்களூரை சேர்ந்த பிரபல ஓவியர் ஒருவர் இந்த படத்தை வரைந்து இருந்தார். ரஜினி நிஜமாகவே புரந்தரர் தோற்றத்தில் இருப்பதாக ஓவியத்தை பார்த்தவர்கள் பாராட்டினர்.
புரந்தரதாசர் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்றும் அப்படத்தில் புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்றும் விழாவில் வற்புறுத்தப்பட்டது. ரஜினி ஏற்கனவே ஸ்ரீராகவேந்திரர் வேடத்தில் நடித்துள்ளார். எனவே புரந்தரதாசர் வேடத்திலும் அவர் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ரஜினி சார்பில் விழாவில் பங்கேற்ற அவரது நண்பர் ராவ்பகதூர் பேசும்போது விழாக்குழுவினர் அளித்த ஓவியத்தை ரஜினியிடம் ஒப்படைப்பேன். அத்துடன் புரந்தரதாசர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் வலியுறுத்துவேன் என்றார்.