நீங்கள் செய்யும் செயலிலேயே இருக்கும் உடற்பயிற்சிகள்!!

354

exercise

உடற்பயிற்சி செய்தால், தசைகளுக்கு நல்லது என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால், இதற்கென நேரம் ஒதுக்க முடியாத நிலை பல பெண்களுக்கு. பல குடும்பங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதை கிண்டலாகத்தான் பார்க்கின்றனர்.

உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் செலவழிக்க முடியவில்லை என்று புலம்பும் பெண்களுக்கு இதோ சில உடல் மற்றும் மனப் பயிற்சிகள். பெரும்பாலான பயிற்சிகள் அனைவராலும் செய்யக் கூடியவை தான் என்றாலும் ரத்தக்கொதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் பயிற்சிகளை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

* வரிசையில், அதிக நேரம் நிற்க நேரும்போது, உடலை அசைக்காமல், கழுத்தை, வலமும் இடமுமாக திருப்புங்கள். கழுத்துக்கு இது நல்ல பயிற்சி. அதே போல், உடலின் கீழ்ப்பகுதியை அசைக்காமல், இடுப்புக்கு மேல் உள்ள பகுதியை, வலதும், இடதுமாகத் திருப்புங்கள். இதனால், தொப்பைப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி, கொழுப்பு குறையும்.

* மணிக்கட்டுகளுக்கான பயிற்சி இது: இதை, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். முஷ்டியை நன்கு இறுக்கி, பின், ஒவ்வொன்றாக எல்லா விரல்களையும் அகலமாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, மணிக்கட்டைச் சுழற்றுங்கள். மணிக்கட்டை மேலும் கீழுமாக சில முறை உதறுங்கள். பிறகு, மொத்த கையுமே தளர்த்தி, அசைத்துப் பாருங்கள்.

* தொலைபேசி ரிசீவரை இடது கையில் வைத்திருந்தால், நாற்காலியில் அமர்ந்து, வலது கையில், பேப்பர் வெயிட் அல்லது கனமான புத்தகம் போன்ற ஒரு பொருளை கையில் எடுத்து, தலைக்கு மேல் தூக்குங்கள், பிறகு, உங்கள் தலைக்குப் பின்புறம் வழியாக அதை, கீழே கொண்டு வந்து, அப்படியே பக்கவாட்டில் கொண்டு வந்து இங்குமங்குமாக ஆட்டுங்கள். அதாவது, உங்கள் மார்புப் பகுதியை நோக்கி கொண்டு வருவது போலிருக்க வேண்டும். பிறகு மெதுவாகப் பக்கவாட்டில் இறக்குங்கள். தொடர்ந்து சில தடவை, இப்பயிற்சியை அடிக்கடி செய்து வந்தால், கைகள் வலிமை பெறும்.

* கார், பஸ், ரெயிலில் உட்கார்ந்து செல்லும் போது, மூக்கின் வழியாக காற்றை நன்கு உள்ளே இழுத்து, சில நொடிகள் சுவாசத்தை உள்ளேயே அடக்கி, நாக்கை வெளிப்புறமாக நீட்டுங்கள். நாக்கினால், முகவாயின் கீழ்ப்பகுதியைத் தொடுவது போன்று இருக்கட்டும். கண்களையும் முடிந்தளவு நன்கு விழித்துப் பாருங்கள். இப்போது, வாயைத் திறந்து காற்றை வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சி, உங்கள் முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்கும். ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பை அண்ட விடாது.

* ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் நடந்து செல்ல நேரும் போது, உடலை உறுதியாகவும் முகத்தில் தைரியம் வெளிக்காட்டும் விதமாக, கண்கள் வாய் தலையை அசைப்பது எல்லாவற்றிலுமே ஒரு கம்பீரத்தை (தற்காலிகமாவது) கொண்டு வாருங்கள். தோள்களை இறுக்கமின்றியும், அந்தப் பகுதி, உங்களுக்கு பழக்கமானது போன்ற உணர்வோடு நடந்து செல்லுங்கள்.