வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பை ததேகூ வின் சிலர் புறக்கணிக்கலாம்!!

460

1 (44)இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் ´´வரவு – செலவுத் திட்டத்ததை விமர்சிக்கலாம். அதற்காக அதனை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை´´ என வலியுறுத்தி கூறினார்

“கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் நிதானமாக பக்குவமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டிய தேவை உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். “நீண்ட பயணமொன்றை பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவசரப்பட்டு அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது” என்றும் குறிப்பிட்டார் இரா. சம்பந்தன் .

வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எதிர்வரும் 16ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. அதன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் பெறும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

ஈ.பி. ஆர். எல். எப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஈ.பி. ஆர். எல் எப் எடுத்துள்ள இதே நிலைப்பாட்டை இறுதி வாக்கெடுப்பின் போது டெலோவும் எடுக்க தற்போது தீர்மானித்துள்ளது.

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் வாக்கெடுப்புக்கு முன்னதாக தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும் என டெலோ எதிர்பார்க்கின்றது. அப்படி முடிவ வெளிவராவிட்டால் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க மாட்டர்கள் என்கின்றர் டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன். இந்த முடிவை தமது கட்சியின் பொதுச் சபை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.