
அதிகாரிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அரசியல் ரீதியில் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதான வடக்கின் காடழிப்பு மற்றும் மணல் அகழ்வு உள்ளிட்ட அனைத்து வகையிலான சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் எந்தவிதமான தயவு தாட்சயண்யமுமின்றி சட்டம் நடைமுறைப்படுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சபையில் தெரிவித்தார்.
சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு தொடர்பில் என்னால் அமைக்கப்படவிருக்கின்ற உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒரு வாரத்தினுள் வடக்கிற்கு விஜயம் செய்து இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் வடக்கின் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வடக்கிற்கு செல்லும் உயர் மட்ட அதிகாரிகளின் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேவையான அனைத்த செலவினங்களையும் தாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தின் நேற்று திங்கட்கிழமை அமர்வின்போது இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கமத் தொழில், நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மஹாவலி, மொரகாகந்த நீர்ப்பாசன திட்டங்களின் நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்றுதான் மஹா ஓயா தெற்கு நீர்ப்பாசனத் திட்டத்தினூடாக மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்வாங்கும் புதிய திட்டமொன்றுக்கான நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத் திட்டத்தின் மூலம் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நன்மை அடைவர். இவ் வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கென முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின்போது, அப்போதிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகளின் எதிர்ப்பினையும் மீறி காடழிப்புக்கென மன்னார் மாவட்டத்தில் 2500 ஏக்கர்களுக்கும் , வவுனியாவில் 325 ஏக்கர்களுக்கும் , , முல்லைத்தீவில் 445 ஏக்கர்களுக்கும் , கிளிநொச்சியில் 65 ஏக்கர்களுக்கும் , சட்டவிரோதமான முறையில் அனுமதி வழங்கப்பட்டது.
சட்டவிரோத காடழிப்பு மற்றும் மணல் அகழ்வு தொடர்பில் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் இயற்கை வளங்களை அழிப்பதற்கும் சட்டவிரோதமான செயற்பாடுகளை அனுமதிப்பதற்கும் முடியாது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டியதும் அவசியம். அத்துடன் வடக்கில் இடம்பெற்று வருகின்ற காடழிப்புகள், மணல் அகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையிலான சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகளையும் ஆராய்தலின் பொருட்டு ஒரு வாரத்தினுள் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்றை ஸ்தாபித்து அக்குழுவை வடக்கிற்கு அனுப்பி வைக்கவுள்ளேன்.
அக்குழுவானது இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் தமது ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் அறிக்கையின் அடிப்படையில் வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெறும். வடக்கு ஆய்வுக்கென செல்கின்ற அதிகாரிகள் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ள முடியும். அதற்கான அனைத்து செலவினங்களையும் நாம் மேற்கொள்வோம். இக்குழுவில் இணைந்து கொள்ளும் உறுப்பினர்களும் தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும்.
மாணிக்கம்
இதேவேளை மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எக்காரணத்தைக் கொண்டும் நாம் வெ ளிநாட்டவருக்கு மாணிக்கக்கல் அகழ்வுக்கான அனுமதியினை வழங்கப்போவதில்லை. இதை நாம் அரசாங்கத்தின் கொள்கையாக கொண்டுள்ளோம்.
புதிய சட்டம்
மேலும் சூழல் மாசடைதலை தடுப்பதற்கு ஏதுவான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் 2016 ஜனவரி முதல் பொலித்தின் பாவனை தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெ ளியாகும்.
எஸ்பெஸ்டஸ்க்கு 2018 இல் தடை
மேலும் புற்றுநோய்க்கான காரணிகளில் ஒன்றாக எஸ்பெஸ்டஸ் அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் 2018 முதல் அதன் பாவனையைத் தடை செய்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.





