இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை அணி.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக அம்லா 77 ஓட்டங்களையும் டுமினி 97 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்டுகளையும் மலிங்க 3 விக்கெட்டுகளையும் டில்ஷான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் தனது 17வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். டில்ஷான் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும் சங்ககார 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 5வதும் இறுதியுமான போட்டி வரும் 31ம் திகதி ஆர் பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.