எரிபொருளுக்காக புதிய பொறிமுறையொன்று, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படுமென, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இவ்வருடம் மே மாதம் 30ஆம் திகதிவரை அரச நிறுவனங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்த வேண்டிய மொத்தக்கடன் 30,399 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
அவற்றில் களனி திஸ்ஸ மின் நிலையம் 1,650 மில்லியன் ரூபாவையும், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 1,180 மில்லியன் ரூபாவையும், இலங்கை மின்சாரசபை 1.8 பில்லியன் ரூபாவையும், சுன்னாகம் வடக்கு மின்நிலையம் 648 மில்லியன் ரூபாவையும், லக்விஜய மின்நிலையம் 280 மில்லியன் ரூபாவையும் கடனாக வைத்துள்ளன.
அத்துடன், கடந்த மே மாதம் 30ஆம் திகதியுடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கான மின்நிலையங்களின் மொத்தக் கடன் தொகை 477.57 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கிக்கு 195.70 பில்லியன் ரூபாவையும், மக்கள் வங்கிக்கு 203.61 பில்லியன் ரூபாவையும், தேசிய ஈரான் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திற்கு 34.36 பில்லியன் ரூபாவையும் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த கடனை செலுத்துவதற்கு புதிய விலைப் பொறிமுறையொன்றை அமுல்படுத்துவது அவசியமாவதால் எதிர்வரும் மார்ச் மாதத்தில் குறித்தவாறு புதிய விலைப்பொறிமுறை அமுல்படுத்தப்படும் என்றார்.